2007ம் ஆண்டு, திருவொற்றியூர் பகுதியில் பாண்டியமணி என்பவரை கொலை
செய்தது தொடர்பான H-8 திருவொற்றியூர் காவல் நிலைய கொலை வழக்கில் எதிரி
ஷேக் அப்துல்லா, வ/20, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் என்பவர் உட்பட 5
எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்,
நீதிமன்ற பிணையில் வெளியே சென்ற எதிரி ஷேக் அப்துல்லா, திருவள்ளூர்
மாவட்டம், பொன்னேரி 4வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
ஆஜராகாததால், 2010ம் ஆண்டு ஷேக் அப்துல்லாவை கைது செய்து ஆஜர் செய்ய
நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பல வருடங்கள்
தலைமறைவாக உள்ள நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எதிரிகளை விரைந்து
கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திட உத்தரவிட்டதன்பேரில், தீவிர
குற்றத்தடுப்பு பிரிவு (வடக்கு) (SCS-North) உதவி ஆணையாளர் மேற்பார்வையில்,
வடக்கு மண்டல தீவிர குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான
காவல் குழுவினர் மேற்படி வழக்கில் 2007ம் ஆண்டு ஷேக் அப்துல்லா கைது
செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து, நவீன
தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தற்போதைய நிலவரப்படி பல்வேறு உருவங்கள்
வடிவமைத்து தீவிர விசாரணை செய்தும், சமூக வலைதளங்கள் மற்றும் அவர்
ஏற்கனவே வசித்து வந்த வீடுகளின் அருகாமையில் விசாரணை மேற்கொண்டும் தீவிர
தேடுதலுக்கு பின் எதிரியின் முகாந்திரம் அறிந்து பிடிக்க முகாமிட்டு கண்காணித்து
வந்த நிலையில், இவ்வழக்கின் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எதிரி ஷேக்
அப்துல்லா, வ/39, சோழம்பேடு மெயின் ரோடு, திருமுல்லைவாயல், திருவள்ளூர்
என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரி ஷேக் அப்துல்லா H-8
திருவொற்றியூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.
விசாரணையில் ஷேக் அப்துல்லா நீதிமன்ற பிணையில் வெளியே சென்று
பல்வேறு இடங்களில் இருப்பிடத்தை மாற்றியமைத்து, தனியார் நிறுவனத்தில் வேலை
செய்து கொண்டும், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டும், இறுதியாக
திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர் எதிரி ஷேக் அப்துல்லா, H-8 திருவொற்றியூர் காவல்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்
செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்கண்ட கொலை வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல்
சுமார் 19 வருடங்கள் தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட
எதிரியை தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கைது செய்த,
வடக்கு மண்டல தீவிர குற்றத்தடுப்பு பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர
காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
