hello madras mobile banner 1200x300

சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், `நீட்’ ஒழிப்புப் போராளி அனிதாவின் நினைவேந்தல் தொடர்பாக, ஆற்றிய உரை

சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், `நீட்’ ஒழிப்புப் போராளி அனிதாவின் நினைவேந்தல் தொடர்பாக, ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 

`நீட்’ ஒழிப்புப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாள்.  இன்றைக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் அவர்கள் அனிதாவின் நினைவேந்தலை சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக, நம் அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறோம்.

நினைவேந்தல் நிகழ்ச்சி

தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பாகவும், அனிதாவின் குடும்பத்தினர் சார்பாகவும், தங்கை அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு, சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.

எந்த அரசியல் சார்பும் இல்லாமல் நடத்தப்பட இருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்துக்கு, இந்த அரசு மற்றும் சென்னை மாநகரக் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.  நினைவேந்தல் நடத்துவதற்கு அனுமதி கேட்டு, 15 நாட்களுக்கு முன்பாகவே அவர்கள் முறைப்படி கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால், காவல்துறை இதை ஆர்ப்பாட்டம் என்று சொல்லி, `அனுமதி இல்லை’ என்று மறுத்திருக்கிறார்கள்.  அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அவர்கள் என்னைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். 

`நீட்’ கொடுமையின் முதல் மரணம்

`நீட்’ கொடுமையால் இந்தியாவில் நடந்த முதல் மரணம் தங்கை அனிதாவின் மரணம்.  தங்கை அனிதா மரணம் அடைந்தபோது, நம் முதலமைச்சர் அவர்கள் அன்றைக்கு அனிதாவின் வீட்டுக்கே சென்று துக்கம் விசாரித்தார்கள்.  எங்கள் தலைவரும் அங்கு சென்றிருந்தார்.

இன்று ஆளுங்கட்சியும் `நீட்’டை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள்.  ஆனால், ஜனநாயக முறையில் அமைதியாக நடக்க இருந்த ஒரு `நினைவேந்தல் நிகழ்ச்சி’க்கு ஏன் இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை என்பதை இங்கு கேட்க விரும்புகிறேன்.  

`நீட் ஒழிப்பின் அடையாளம்’ தங்கை அனிதாவின் நினைவேந்தலுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அரசின் கவனத்துக்கு எடுத்து வந்து அமர்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 

இதை வைத்து நாங்கள் அரசியல் செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.  பெசன்ட்  நகர், வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் அன்றைக்கும், திருத்தேர் அன்றைக்கும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மக்கள் கூட்டம் இல்லை!

அந்தக் கொடியேற்றம் கடந்த வாரம் முடிந்துவிட்டது.  இனி, அடுத்து செப்டம்பர் 7, 8 – ஆம் தேதிதான் அந்தக் கொடியேற்றம் மற்றும் திருத்தேர் விழாவும் நடக்க இருக்கின்றன.  இன்றைய தினம் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் கிடையாது.  நேற்று மாலைகூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைவேந்தல் நடக்க இருக்கின்ற அந்த இடத்துக்குச் சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள்.  பெரிய அளவில் அங்கு கூட்டம் இல்லை.  இப்படியான சூழல் இருக்கும்போது, அங்கு அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  அப்படி இல்லையென்றால், அவர்களிடம் முறையாகத் தெரிவித்து ஒரு மாற்று இடத்தை விரைவில் தேர்வு செய்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »