சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப.,
அவர்களின் உத்தரவுப்படி, கூடுதல் காவல் ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு
அவர்களின் அறிவுரையின்பேரில், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்
திருமதி.K.உஷாராணி தலைமையில் நேற்று (10.09.2026) காலை, சென்னை,
தேனாம்பேட்டை, கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரியில்
சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி(Digital Arrest
scam), ஆன்லைன் முதலீட்டு மோசடி (Online Investment Scam), சைபர் புல்லிங்,
திருமண மோசடி, பரிசு மோசடி, கூரியர் மோசடி உள்ளிட்ட பல்வேறு சைபர்
குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, இன்ஸ்டாகிராம், முகநூல், X தளம், Snapchat மற்றும் வாட்சப்
உள்ளிட்ட சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், சமூக
வலைதளங்களில் போலியான பெயரில் கணக்கு வைத்து மோசடியில் ஈடுபடும்
நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும், கடவுச்சொற்கள் (OTP), தனிப்பட்ட
தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற முக்கிய விவரங்களை
தேவையில்லாமல் சமூக வலைதளங்களிலோ, இணையத்திலோ பகிராமல்
பாதுகாப்புடன் கையாள்வது குறித்தும், அறிமுகமில்லாதவர்களின் நண்பராக சேரும்
அல்லது பின்தொடரும் கோரிக்கைகளை ஏற்காமல் இருத்தல் போன்ற அறிவுரைகள்
மாணவிகளுக்கு வழங்கப்பட்டன
மேலும், ஏதேனும் சைபர் துன்புறுத்தல், மிரட்டல் அல்லது இணைய மோசடியை
எதிர்கொண்டால் உடனடியாகப் பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது
காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அல்லது பெற்றோர்கள் உதவியுடன்
சைபர் குற்ற உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்வது மற்றும்
www.cybercrime.gov.in என்ற National Cyber Crime Reporting Portal மூலம்
புகார் அளிப்பது குறித்து விளக்கப்பட்டு, சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு
துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மேற்படி கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள், Madras School
of Social work குழுவைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரி மாணவிகள் உள்பட சுமார்
150 நபர்கள்கலந்து கொண்டனர்.
